பஞ்சாமிர்த வண்ணம்

pamban

சிறீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் (Panchamirthavannam lyrics) . முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானேஇப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன்இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால்முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி.

பாகம் 1 – பால்
சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம்.
1 – 1
இலங்கு நன்கலை விரிஞ்சனோடு
அனந்தனும் சத மகன்சதா
வியன்கொள் தம்பியர்களும் பொனாடு
உறைந்த புங்கவர்களும் கெடாது
என்றும் கொன்றை அணிந்தோனார்
தந் தண் திண் திரளும் சேயாம்
என்றன் சொந்தமினும் தீதேது
என்று அங்கங்கு அணி கண்டு ஓயாது
ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமே
ஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடு
எலும்புறும் தலைகளும் துணிந்திட
அடர்ந்த சண்டைகள் தொடர்ந்துபேய்
எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு அரன்
மகன் புறஞ்சயம் எனும்சொலே . . . . . . களமிசையெழுமாறே
……… பதவுரை ……
இலங்கு நன்கலை விரிஞ்சனொடு – (அழகாக) விளங்கும் நான்மறை ஓதும் பிரம்மனும்
அனந்தனும் சதமகன் – நாராயணனும் தேவர் கோனான இந்திரனும்
சதா வியன்கொள் தம்பியரும் – நிலைபெற்ற பெருமை கொண்ட தம்பியரும்
பொனாடுறைந்த புங்கவர்களும் கெடாது – பொன்னுலகம் என்று கூறப்படும் தேவலோகத்தில் வாழும் தேவர்களும் அழியாதவாறு
என்றும் கொன்றை அணிந்தோனார் தன் – எப்பொழுதும் கொன்றை மாலை அணிந்த பரமசிவனாரது
தண் திண் திரளும் சேயாம் – திரண்ட சேனைக்கு அதிபனாம் கந்தன் (ஆகிய)
என்றன் சொந்தம் இனும் தீதேது – எனக்கு உற்றவனர் (என்ற பிறகு) இனிமேலும் தீங்கு உண்டோ
என்று அங்கு அங்கு அணிகண்டு ஓயாது – (சூரனொடு) போரிடும்படி எல்லா திக்குகளிலும் அணிவகுத்து உள்ள படைகளைப் பார்த்து நீங்காது
ஏந்து வன்படை வேல் வலி சேர்ந்த திண்புயமே – பலம் மிக்க வேலை ஏந்திய திண்மையான தோள்களில்
ஏய்ந்த கண்டகர் கால் தொடை மூஞ்சி கந்தரமோடு – அமைத்துவந்த அரக்கர்களின் கால், தொடை, முகம் மற்றும் கழுத்துடன்
எலும்புறும் தலைகளும் துணிந்திட – எலும்பாலான கபாலங்களூம் அடிபட்டுவிழ
அடர்ந்த சண்டைகள் தொடர்ந்து – மகா கோரப் போர் செய்து
பேய் எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு – பேய்களும் அரக்கரின் கொழுப்பை உண்டு
அரன் மகன் புறம் செயம் எனும் சொலே – சிவமைந்தனின் பக்கமே வெற்றி என்ற சொற்கள் (கோஷங்கள்)
களமிசை எழுமாறே – போர்க்களத்தில் எழும்படி
1- 2
துலங்குமஞ்சிறை அலங்கவே
விளங்க வந்தவொர் சிகண்டியே
துணிந்திருந்து உயர்கரங்கண் மா
வரங்கள் மிஞ்சிய விரும்புகூர்
துன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள்
கொண்டு அண்டங்களில் நின்றூடே
சுண்டும் புங்கம் அழிந்து ஏலாது
அஞ்சும் பண்டசுரன் சூதே
சூழ்ந்தெழும்பொழுதே கரம் வாங்கி ஒண் திணிவேல்
தூண்டி நின்றவனே கிளையோங்க நின்றுளமா
துவந்துவம் பட வகிர்ந்து வென்று அதி
பலம்பொருந்திய நிரஞ்சனா
சுகம்கொளும் தவர் வணங்கும் இங்கிதம்
உகந்த சுந்தர அலங்க்ருதா . . . . . . அரிபிரமருமேயோ
……… பதவுரை ………
துலங்கு மஞ்சிறை அலங்கவே – அழகான தோகை அசைய
விளங்க வந்தவொர் சிகண்டியே – ஒப்பற்ற மயில் வரவும்
துணிந்து இருந்து உயர்கரங்கண் – வீரத்துடன் அங்கேயே நின்று தூக்கிய கரங்களோடு
மாவரங்கள் மிஞ்சிய இரும்பு கூர் – அரிய வரங்களும் மிக்க கூர்மையான இரும்பாலான
துன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள் – தண்டாயுதம், அம்பு ஈர்வாள் (இரம்பம்) (முதலிய ஆயுதங்கள்)
கொண்டு அண்டங்களில் நின்றூடே – இவைகளைக் கொண்டு அண்ட சராசரங்களின் நடுவே சென்று (போர் செய்து)
சுண்டும் புங்கம் அழிந்து ஏலாது – (அப்படைக்கல மெல்லாம் வேற்படையின் முன்னால்) குறைந்து அழிவது கண்டு, ஒன்றும் செய்ய இயலாது
அஞ்சும் பண்டசுரன் சூதே – நடுங்கிப் போய் சூரனானவன் சூழ்ச்சி செய்ய
சூழ்ந்து எழும்போதே – முயற்சிக்கும்போதே
கரம் வாங்கி ஒண் திணி வேல் – நன்மையும் திண்மையும் உடைய வேலைக் கையில் கொண்டு
தூண்டி நின்றவனே – ஏவிய குமாரனே
கிளை ஓங்க நின்றுள மா – உயர்ந்த கிளைகளைக் கொண்ட மாமரமானதை
துவந்துவம் பட வகிர்ந்து வென்று – இருகூறாகப் பிளந்து, (சூரனை) வெற்றி கொண்டு
அதிபலம் பொருந்திய நிரஞ்சனா – பராக்ரமம் கொண்ட களங்கம் இல்லாதவனே
சுகம் கொளும் தவர் வணங்கும் – ஆனந்தத்தை அடைய விரும்பும் முனிவர் வணங்கும்
இங்கிதம் உகந்த சுந்தர அலங்க்ருதா – இனிமை பொருந்திய அழகிய அலங்காரம் செய்து கொண்டுள்ள கந்தனே
அரிபிரமருமேயோ – ஹரியும் அரனும்
1 – 3
அலைந்து சந்த்தம் அறிந்திடாது
எழுந்த செந்தழல் உடம்பினார்
அடங்கி அங்கமும் இறைஞ்சியே
புகழ்ந்து அன்றுமெய் மொழிந்தவா
அங்கிங் கென்பது அறுந்தேவா
எங்கும் துன்றி நிறைந்தோனே
அண்டும் தொண்டர் வருந்தாமே
இன்பம் தந்தருளும் தாளா
ஆம்பி தந்திடுமா மணி பூண்ட அந்தளையா
ஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா
அலர்ந்த இந்துள அலங்கலும் கடி
செறிந்த சந்தன சுகந்தமே
அணிந்து குன்றவர் நலம் பொருந்திட
வளர்ந்த பந்தனண எனும் பெணாள் . . . . . . தனை அணை மணவாளா
……… பதவுரை ………
அலைந்து சந்ததம் அறிந்திடாது – (பன்றியாகவும் அன்னமாகவும்) பல காலம் திரிந்து தேடிய பின்பும் (அடி முடி) காணக் கிடைக்காது
எழுந்த செந்தழல் உடம்பினார் – (அவ்வாறு) நெருப்பாக வடிவு கொண்ட பரம சிவனார்
அடங்கி அங்கமும் இறைஞ்சியே – (ஏதும் அறியாதவர் போல்) கைகட்டி பணிவுடன் கேட்டுக் கொண்டு
புகழ்ந்த அன்று மெய் மொழிந்தவா – உன்னைப் போற்றிய பொழுது மெய்ப் பொருளை அவருக்கு உபதேசித்தவனே
அங்கு இங்கு என்பது அறும் தேவா – அதோ அங்குதான், இதோ இங்கு தான் உள்ளான் என்று அறுதியிட்டுக் கூற முடியாதவனே
எங்கும் துன்றி நிறைந்தோனே – எங்கெங்கும் பொருந்தி எப்பொருளிலும் நீக்கமற நிறைந்தோனே
அண்டும் தொண்டர் வருந்தாமே – உன்னை நாடி வந்த பக்தர் துன்பம் கொள்ளாதவாறு
இன்பம் தந்தருளும் தாளா – ஆனந்தம் தரும் திரு வடிகளை உடையவனே
ஆம்பி தந்திடும் மாமணி பூண்ட அந்தளையா – ஒலி செய்திடும் முத்துப் பரல்களை உடைய காற்சிலம்பை அணிந்தவனே
ஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணா – (எல்லொரையும் ஆளும்) ஈசனின் மைந்தனே, என்னை ஆட் கொள்ளும் செம்மையான பாதங்களை உடையவனே
அலர்ந்த இந்துள அலங்கலும் – மலர்ந்த கடப்ப மாலையும்
கடி செறிந்த சந்தன சுகந்தமே – மணம் மிகுந்த சந்தனத்தின் வாசமும்
அணிந்து குன்றவர் நலம் பொருந்திட – (இவை) அணிந்து வேடுவர் குலம் நன்மை அடைவதற்காக
வளர்ந்த பந்தணை எனும் பெணாள்தனை – அவர்களால் (மகள் என்ற உறவு என்று சொல்லிக் கொண்டு) வளர்க்கப் பட்ட குறப்பெண்ணை
அணை மணவாளா – ஆட்கொண்டு மணந்த மணவாளனே
1 – 4
குலுங்கிரண்டு முகையும்களார்
இருண்ட கொந்தள ஒழுங்கும்வேல்
குரங்கும் அம்பகம் அதும் செவாய்
அதும் சமைந்துள மடந்தைமார்
கொஞ்சும் புன்தொழிலும் கால் ஓரும்
சண்டன் செயலும் சூடே
கொண்டு அங்கம் படரும் சீழ்நோய்
அண்டம் தந்தம் விழும்பாழ் நோய்
கூன்செயும் பிணிகால் கரம் வீங்கழுங்கலும் வாய்
கூம்பணங்கு கணோய் துயர் சார்ந்த புன்கணுமே
குயின்கொளும் கடல் வளைந்த இங்கெனை
அடைந்திடும்படி இனும்செயேல்
குவிந்து நெஞ்சமுளணைந்து நின்பதம்
நினைந்து உய்யும்படி மனம்செயே . . . . . . திருவருள் முருகோனே
……… பதவுரை …..….
குலுங்கி இரண்டு முகையுங்களார் – அழகிய இரண்டு கொங்கைகளும்
இருண்ட கொந்தளம் ஒழுங்கும் – (மலரணிந்ததால்) வண்டு மொய்க்கின்ற கருங்கூந்தலும்
வேல் குரங்கும் அம்பகம் அதும் – வேலைக் காட்டிலும் கூரிய விழிகளும்
செவாயதும் சமைந்துள மடந்தைமார் – சிவந்த அதரங்களை உடைய வஞ்சியர்
கொஞ்சும் புன்தொழிலும் – (பெண்களைப்) புகழ்வதையே தொழிலாகக் கொண்டு (அதன் விளைவால்)
கால் ஓரும் சண்டன் செயலும் – இறுதி காலத்தை தெரிந்து கொண்டு வரும் இயமனின் வருகையும்
சூடே கொண்டு அங்கம் படரும் சீழ் நோய் – வெப்பத்தினால் உடலில் வரும் நோய்கள்
அண்டம், தந்தம் விழும் பாழ் நோய் – அண்டவாதம் மற்றும் பல் விழு நோய்
கூன் செய்யும் பிணி கால்கரம் வீங்கழுங்கலும் – உடலைக் கூனச்செய்யும் நோயும், கால் கை வீக்கமும்
வாய் கூம்பணங்கு கணோய் – வாய் கூம்புதலும் கண் நோய்களும்
துயர் சார்ந்த புன்கணுமே – வருத்தம் தரும் மற்ற நோய்களும்
குயின் கொளும் கடல் வளைந்த இங்கெனை – மேகங்களால் உண்ணப் படும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் என்னை
அடைந்திடும்படி இனும் செயேல் – பிறக்கும்படி செய்யாதே
குவிந்து நெஞ்சமுள் அணைந்து – என் உள்ளத்தை உன்னை நோக்கி ஒருமுகப் படுத்தி உன்னைச் சரணடைந்து
நின் பதம் நினைந்து உயும்படி மனம் செயே – உன் திருவடிகளை நினைந்து நான் உய்யும்படி திரு உள்ளம் செய்வாயே
திருவருண்முருகோனே – நலம்செய் முருகனே
பாகம் 2 – தயிர் (பட்டியலுக்கு)
முப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள்.
மேலும் வள்ளியை நாடிச் சென்று அவளுக்குத் தன்னைத் தந்து கடிமணம் புரிந்து கொண்டது.
2 – 1
கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் குளிர்
கலைப்பிறை என்றிடு நுதல் திலகம் திகழ்
காசு உமையாள் இளம் மாமகனே
களங்க இந்துவை முனிந்து நன்கு அது
கடந்து விஞ்சிய முகம் சிறந்தொளி
கால் அயிலார் விழிமா மருகா . . . . . . விரைசெறிஅணிமார்பா
……… பதவுரை ………
கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் – மணமுள்ள கொத்துமலர் அணிந்த மேகம் போன்ற கூந்தலையும்
குளிர்கலைப்பிறை என்றிடு நுதல் – குளிர்ச்சியான ஒளியை வழங்கும் பிறைச் சந்திரனை ஒத்த நெற்றியும்
திலகம் திகழ் காசு – அதில் திலகமும், பேரொளி வீசும்
உமையாள் மா மகனே – பார்வதியின் பெருமை மிகுந்த மகனே
களங்க இந்துவை முனிந்து – மாசு படிந்த சந்திரனைக் கடிந்து
நன்கு அது கடந்து விஞ்சிய முகம் – அதனை மிஞ்சும்படியான அழகிய முகமும்
சிறந்த ஒளி கால் அயிலார் விழி மா மருகா – ஒளி வீசும் வேல் போன்ற கூர்மையான கண்களை உடைய திருமகளின் மருகனே
விரை செறி அணி மார்பா – அழகிய மணம் மிகுந்த மாலைகளை அணிந்த மார்பு உடையவனே
2 – 2
கனத்துயர் குன்றையும் இணைத்துள கும்ப
கலசத்தையும் விஞ்சிய தனத்திசை மங்கைகொள்
காதலன் நான்முக னாடமுதே
கமழ்ந்த குங்கும நரந்தமும் திமிர்
கரும்பெனும் சொலை இயம்பு குஞ்சரி
காவலனே குகனே பரனே . . . . . . அமரர்கள் தொழுபாதா
……… பதவுரை ………
கனத்து உயர் குன்றையும் இணைத்துகத்துள – பெருத்து ஓங்கிய மலைகளுக்கும், இரண்டாக உள்ள
கும்பகலசத்தையும் விஞ்சிய – கும்பகலசங்களையும் மிஞ்சிய
தனத்து இசைமங்கை கொள் – தனங்களை உடைய இசையில் வல்லவளான கலைமகளின்
காதலன் நான்முகன் நாடமுதே – நாயகனாம் பிரமன் தேடும் அமுதம் போன்றவனே
கமழ்ந்த குங்கும நரந்தமும் திமிர் – மணம் பரப்பும் குங்குமமும் கஸ்தூரியும் பூசி கரும்பு எனும் சொலை இயம்பு ௭ கரும்பின் சுவை போன்ற இனிய வாத்தைகளைக் கூறும்
குஞ்சரி காவலனே குகனே பரனே – தேவயானையின் கணவனே, குகனே கடவுளே
அமரர்கள் தொழு பாதா – தேவர்கள் பணியும் திருவடிகளை உடையவனே
2 – 3
உடுக்கிடையின் பணி அடுக்குடையுங்கன
உரைப்பு உயர் மஞ்சுறு பதக்கமொடு அம்பத
ஓவிய நூபுர மோதிரமே
உயர்ந்த தண்தொடைகளும் கரங்களில்
உறும் பசுந்தொடிகளும் குயங்களில்
ஊர் எழில்வாரொடு நாசியிலே . . . . . . மினும்அணி நகையோடே
……… பதவுரை ………
உடுக்கு இடையின் பணி அடுக்கு உடை – உடுக்கை போன்ற இடையில் ஒட்டியாணம், மடிப்பு உடைய ஆடையும்
கன உரைப்பு உயர்மஞ்சு உறு பதக்கமொடு – மாற்று குறையாத பொன்னிலான அழகிய பதக்கமும்
அம்பத ஓவிய நூபுர மோதிரமே – திருவடிகளில் சித்திர வேலைப்பாடுடைய சிலம்பும் மற்றும் விரலில் மோதிரமும்
உயர்ந்த தண்தொடைகளும் – அடர்த்தியாக தொடுக்கப்பட்ட குளிர்ச்சி நிறைந்த மாலைகளும்
கரங்களில் உறு பசுந்தொடிகளும் – கரங்களில் பசுமையான வளையல்களும்
குயங்களில்ஊர் எழில் வார் – குசங்களில் அழகிய கச்சையும்
நாசியிலே மினுமணி நகையோடே – மூக்கில் மினுக்கும் புல்லாக்கும்
2-4
உலப்பறு இலம்பகமினுக்கிய செந்திரு
உருப்பணி யும்பல தரித்து அடர் பைந்தினை
ஓவலிலா அரணே செயுமாறு
ஒழுங்குறும் புனமிருந்து மஞ்சுலம்
உறைந்த கிஞ்சுக நறும் சொல் என்றிட
ஓலமதே இடுகானவர் மா . . . . . . மகளெனும் ஒருமானாம்
……… பதவுரை ………
உலப்பறு இலம்பகம் – குறையில்லாத நெற்றிச்சுட்டி (இலம்பகம்)
மினுக்கிய செந்திரு உரு – ஒளிவீசும் ஸ்ரீதேவி எனும் தலைக்கோலம்
பணியும் பல தரித்து – (முதலிய) பல ஆபரணங்களை தரித்து
அடர் பைந்தினை – அடர்ந்த தினை விளையும் புனத்தை இடைவிடாது காவல் செய்யுமாறு
ஓவலிலா அரணே செயுமாறு – இடைவிடாது காவல் புரியுமாறு
ஒழுங்குறும் புனமிருந்து – சீராக வளர்ந்த பைம் புனத்தில் தங்கி
மஞ்சுலம் உறைந்த கிஞ்சுக நறும்சொல் என்றிட – அழகிய கிளியின் இனிமையான குரலில்
ஓலமதேயிடு கானவர் – ஆலோலம் என்று கூவும் வேடவர்
மா மகள் எனும் – பெருமை மிகுந்த மகள் என்னும்
ஒரு மானாம் – தோன்றிய ஒரு மானாகிய
2 – 5
மடக்கொடிமுன் தலை விருப்புடன் வந்து அதி
வனத்துறை குன்றவர் உறுப்பொடு நின்றள
மானினியே கனியே இனிநீ
வருந்தும் என்றனை அணைந்து சந்ததம்
மனம் குளிர்ந்திட இணங்கி வந்தருளாய்
மயிலே குயிலே எழிலே . . . . . . மட வனநினதேர் ஆர்
……… பதவுரை ………
மடக்கொடி முன் தலை – கொடி போன்ற வள்ளியின் முன் முதன்மைவாய்ந்த
விருப்புடன் வந்து – ஆசையுடன் வந்து
அதிவனத்துறை குன்றவர் உருப்பொடு நின்று – இந்த காட்டினில் வேட ரூபத்தோடு நின்று
இள மான் இனியே – அழகிய மான் போன்றவளே
கனியே இனி நீ – கனிரசம் போல இனிப்பவளே இனிமேல் நீ
வருந்தும் என்றனை அணைந்து – உன்னை அடைவதற்காக ஏங்கியிருக்கும் என்னை அணைத்து
சந்ததம் மனம் குளிர்ந்திட – எப்பொழுதும் என் மனம் குளிர்ந்திடும்படி
இணங்கி வந்தருளாய் – இசைந்து வருவாயாக
மயிலே, குயிலே, எழிலே – மயிலே, குயிலே அழகே
மடவன நினது ஏரார் – இளைய அன்னம் போன்றவளே உனதுஎழுச்சி மிகுந்ததும் அழகியதுமான
(ஏர் – எழுச்சி, நிறைவு: ஆர் – அழகு)
2 – 6
மடிக்கொரு வந்தனம் அடிக்கொரு வந்தனம்
வளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம்
வாஎனும் ஓர் மொழியே சொலுநீ
மணங்கிளர்ந்தநல் உடம்பு இலங்கிடு
மதங்கி யின்றுளம் மகிழ்ந் திடும்படி
மான்மகளே எனைஆள் நிதியே . . . . . . எனும் மொழி பலநூறே
……… பதவுரை ….…..
மடிக்கொரு வந்தனம் – உனது மடிக்கு ஒரு வணக்கம்
அடிக்கொரு வந்தனம் – பாதத்திற்கு ஒரு வணக்கம்
வளைக்கொரு வந்தனம் – கரத்திற்கு ஒரு வணக்கம்
விழிக்கொரு வந்தனம் – பார்வைக்கு ஒரு வணக்கம்
வா எனும் ஓர் மொழியே சொலு நீ – என்னை வா என்று ஒரு சொல் பகர்வாய்.
மணம் கிளர்ந்த நல் உடம்பு – நறுமணம் வீசிடும் மேனி பிரகாசிக்கும்
இலங்கிடு மதங்கி – ஆடல் பாடலில் வல்லவளே
இன்றுளம் மகிழ்ந்திடும்படி – என்னுடைய உள்ளம் இன்று இன்புறும்படி
மான்மகளே – மான்மகளே
எனை ஆள் நிதியே – என்னை ஆட்கொள்ளும் பொக்கிஷமே
எனும் மொழி பலநூறே – என்று பலவாறாகப் பேசியும்
2 – 7
படித்தவள் தன்கைகள் பிடித்துமுனம் சொன
படிக்கு மணந்துஅருள் அளித்த அனந்த
கிருபா கரனே வரனே அரனே
படர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு
பதம் குரங்குநர் உளம் தெளிந்து அருள்
பாவகியே சிகியூர் இறையே . . . . . . திருமலிசமர் ஊரா
……… பதவுரை ………
படித்தவள் தன் கைகள் பிடித்து – (என்றெல்லாம்) சொல்லி அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு
முனம் சொனபடிக்கு மணந்து – முற் பிறவியில் வாக்கு கொடுத்தவாறு மணந்து
அருள் அளித்த – அருளியவனே
அனந்த கிர்பாகரனே – எல்லையற்ற கருணை உள்ளவனே
வரனே அரனே – வரம் அருள்பவனே, சிவனே
படர்ந்த செந்தமிழ் தினம் சொல் – இனிய தமிழ்ப் பாடல்களை தொடர்ந்து கூறி
இன்புடன் பதம் – அன்புடன் உன் திருவடியை
குரங்குநர் உளம் – வணங்குவார் நெஞ்சம்
தெளிந்தருள் – தெரிந்து அருள்பவனே
பாவகியே – அக்னியில் தோன்றிய முருகனே
சிகிஊர் இறையே – மயிலேறும் பெருமானே
திருமலி சமரூரா – செல்வம் மிக்க திருப்போரூர் பெருமாளே
2 – 8
பவக்கடல் என்பது கடக்கவுநின் துணை
பலித்திடவும் பிழை செறுத்திடவும் கவி
பாடவும்நீ நடமாடவுமே
படர்ந்து தண்டயை நிதம் செயும்படி
பணிந்த என்றனை நினைந்து வந்தருள்
பாலனனே எனையாள் சிவனே . . . . . . வளர் அயில் முருகோனே.
……… பதவுரை …..….
பவக்கடல் என்பது கடக்கவும் நின் துணை – பிறவிக்கடலைக் கடப்பதற்கும் உன் உதவி
பலித்திடவும், பிழை செறுத்திடவும் – கிடைக்கவும், என் குறைகளைப் பொறுத்திடவும்
கவிபாடவும் நீ நடமாடவுமே – நான் செந்தமிழ்ப் பாடல் பாடவும் நீ நடனமாடவும்
படர்ந்து தண் தயை நிதம் செயும்படி – என்னிடம் எப்பொழுதும் தங்கி குளிர்ந்த அருள் செய்ய வேண்டி உன்னை
பணிந்த என்றனை நினைந்து வந்தருள் – வணங்கும் என்னை நினைந்து என்னிடம் வந்து அருள் செய்
பாலனனே எனை ஆள் சிவனே – காக்கின்ற கடவுளே, எனை ஆளும் ஆறுமுகச் சிவனே.
வளர் அயில் முருகோனே – நீண்ட வேலாயுத்தை உடையவனே.
பாகம் 3 – நெய் (பட்டியலுக்கு)
வஞ்சகரின் கூட்டு இல்லாமலும், தொண்டர்களின் அணிமையும், சிவ – சக்தியரின் தாண்டவக் கோலமும், கந்தபிரானின் காட்சிக்காக ஏங்கும் தன்மையும் காண்மின்.
3 – 1
வஞ்சம் சூதொன்றும்பேர் துன்பம் சங்கடம் மண்டும் பேர்
மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர்
மான் கணார் பெணார் தமாலினான்
மதியதுகெட்டுத் திரிபவர்தித்திப்பு
என மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தே
மனமுயிர் உட்கச் சிதைத்துமே
நுகர்த்தின துக்கக் குணத்தினோர்
வசையுறு துட்டச் சினத்தினோர்
மடிசொல மெத்தச் சுறுக்குளோர்
வலிஏறிய கூரமுளோர் உதவார்
நடு ஏதுமிலார் இழிவார் களவோர்
மணமலர் அடியிணை விடுபவர் தமையினும்
நணுகிட எனைவிடுவது சரி இலையே . . . . . . தொண்டர்கள் பதிசேராய்
……… பதவுரை ………
வஞ்சம் சூது ஒன்றும் பேர் – சூதும் வஞ்சனையும் மிக்கவரும்,
துன்பம் சங்கடம் மண்டும் பேர் – துன்பத்திலும் வருத்தத்திலும் உழல்பவர்களும்,
மங்கும் பேய் நம்பும் பேர் – அழியும் பேய்களை நம்புபவர்களும்
துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர் – கடுமையாகப் பேசுபவர்களும்
மான் கணார் பெணார் தம் மாலினால் – மான்விழியுடைய வஞ்சியர்களிடம் கொண்ட மயக்கத்தால்
மதியது கெட்டுத் திரிபவர் – அறிவு கெட்டு அலைபவர்
தித்திப்பு என – இனிமை என நினைத்து
மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தே – மது அருந்திச் சுழன்று ஆடுபவர்கள் விருப்பமொடு
மனம் உயிர் உட்கச் சிதைத்துமே – (கொல்லப் படும் பிராணிகள்) உயிரும் உள்ளமும் நடுங்கும்படியாக உயிர்களைக் கொன்று
நுகர் தின துக்கக் குணத்தினோர் – தினந்தோறும் உணவாகக் கொள்ளும் கொடும் குணத்தினர்
வசையுறு துட்டச் சினத்தினோர் – பழிக்கும்படியான கோபத்தைக் கொண்டவர்களும்
மடி சொல மெத்தச் சுறுக்குளோர் – கோள் சொல்லுவதில் அவசரப் படுவோர்
வலியேறிய கூரமுளோர் உதவார் – வன்மை கொண்ட பொறாமை குணத்தவர், யாருக்கும் எதுவும் கொடுக்காதவர்
நடு ஏதுமிலார் இழிவார் களவோர் – நீதியில்லாதவர், கீழோர், திருடர்கள்
மணமலரடி இணை விடுபவர் – உன் இரு பாத கமலங்களைச் சேராதவர்
தமையினும் நணுகிட எனை விடுவது சரியிலையே – இவர்களிடையே இன்னும் எனை சேர்ப்பது சரியில்லை (தயாவான் ஆன உனக்குப் பொருந்தாதது)
தொண்டர்கள் பதி சேராய் – உன் அடியாரிடம் எனைச் சேர்ப்பாயாக.
3 – 2
விஞ்சும்கார் நஞ்சம் தான் உண்டுந் திங்கள் அணிந்தும்கால்
வெம்பும்போதொண்செந்தாள் கொண்டஞ்சு அஞ்சஉதைந்தும்
பூமீன் பதா கையோன் மெய்வீயு மா
விழியை விழித்துக் கடுக எரித்துக்
கரியை உரித்துத் தனுமிசை சுற்றிக்கோள்
விழைவறு சுத்தச் சிறப்பினார்
பிணைமழு சத்திக் கரத்தினார்
விஜய உடுக்கைப் பிடித்துளார்
புரமது எரிக்கச் சிரித்துளார்
விதி மாதவனார் அறியா வடிவோர்
ஒருபாதி பெணாய் ஒளிர்வோர் சுசிநீள்
விடைதனில் இவர்பவர் பணபணம் அணிபவர்
கனைகழல் ஒலிதர நடமிடுபவர்சேய் . . . . . . என்றுள குருநாதா
……… பதவுரை ………
விஞ்சும் கார் நஞ்சந்தான் உண்டும் – கடுமையான கரிய விஷத்தைத் தானே உண்டும்
திங்கள் அணிந்தும் – சந்திரனை தரித்துக் கொண்டும்
கால் வெம்பும்போது – (மார்க்கண்டேயனை நோக்கி ) இயமன் கோபித்து வரும்போது
ஒண் செந்தாள் கொண்டு – ஒளிமிகு செம்மையான கால்களினால்
அஞ்சு அஞ்சவும் உதைந்தும் – (காலனின்) ஐம் பொறிகளும் கலங்குமாறு உதைத்தும்
பூ மீன் பதாகையோன் – அழகிய மீன் கொடியோனாகிய மன்மதனுடைய
மா மெய் வீயு – அழகிய உடல் அழியுமாறு (வீ – அழிவு)
விழியை விழித்துக் கடுக எரித்து – நெற்றிக் கண்ணைத் திறந்து விரைவில் அவனை எரித்து
கரியை உரித்துத் – கஜமுகாசுரனான யானையைக் கிழித்து
தனுமிசைச் சுற்றிக்கோள் – அவன் தோலைத் தன் உடம்பில் போர்த்திக் கொண்ட
விழைவு அறு சுத்தச் சிறப்பினார் – விருப்பு வெறுப்பு அற்ற தூய்மையானவரும்
பிணை மழு சத்திக் கரத்தினார் – மான் மழு சூலம் ஏந்தியவரும்
விஜய உடுக்கைப் பிடித்துளார் – வெற்றியைத் தரும் உடுக்கையை கையில் ஏந்தியவரும்
புரமது எரிக்கச் சிரித்துளார் – புன்முறுவல் பூத்து திரிபுரத்தை எரித்தவரும்
விதிமாதவனார் அறியா வடிவோர் – பிரமனும் திருமாலும் அறியாத ஒரு வடிவமெடுத்தவரும்
ஒருபாதி பெணாய் ஒளிர்வோர் – மாதுக்குத் (பார்வதிக்கு) தன் உடம்பில் ஒரு பாதியைத் தந்து விளங்குபவரும்
சுசி நீள்விடைதனில் இவர்பவர் – தூயதான வெள்ளை ரிஷபத்தின் மேல் விளங்குபவரும்
பணபணமணிபவர் – படமெடுத்தாடும் பாம்பை தரித்தவரும்
கனைகழல் ஒலிதர நடமிடுபவர் சேய் என்றுள குருநாதா – கால்களில் அணிந்த கழல்கள் ஒலி தருமாறு நடமாடும் சிவபெருமானின் குமரன் என்று விளங்கும் குருநாதனே.
3 – 3
தஞ்சம் சேர் சொந்தம் சாலம்செம்பங்கய மஞ்சுங்கால்
தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா
தாம் ததீ ததீ ததீ ததீ
ததிமிதி தத்தித் தரிகிட தத்தத்
திரிகிட தத்தத் தெயென நடிக்கச்சூழ்
தனி நடனக்ருத்தியத்தினாள்
மகிடனை வெட்டிச் சிதைத்துளாள்
தடமிகு முக்கட் கயத்தினாள்
சுரதன் உவக்கப் பகுத்துளாள்
சமிகூ விளமோடு அறுகார் அணிவாள்
ஒருகோ டுடையோன் அனையாய் வருவாள்
சதுமறை களும்வழி படவளர் பவண்மலை
மகளென வொருபெயருடையவள் சுதனே . . . . . . அண்டர்கள் தொழுதேவா
……… பதவுரை .……..
தஞ்சம் சேர்சொந்தம் சால் அம் – சரணடைவதற்கு உரிமை மிகுந்த அழகிய
செம்பங்கயம் அஞ்சும் கால் – தாமரைமலர்களும் நாணும்படி உடைய அழகிய திருவடிகள்
தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா தாந்ததீ ததீ ததீ ததீ ததிமிதி தத்தித் தரிகிட தத்தத் திரிகிட தத்தத் தெயெனநடிக்குச் சூழ் – தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா தாந்ததீ ததீ ததீ ததீ ததிமிதி தத்தித் தரிகிட தத்தத் திரிகிட தத்தத்தெயென சுழன்று நடனமாடும்
தனி நடனக்ருத்யத்தினாள் – நடனத்தைத் தொழிலாய் உடையவள்
மகிடனை வெட்டிச் சிதைத்துளாள் – மஹிஷாசுரனைக் கொன்றவள்
தடமிகு முக்கட் கயத்தினாள் – விசாலமான முக்கண்கள் உடைய மேன்மை தங்கியவள்
சுரதன் உவக்கப் பகுத்துளாள் – சிவன் மகிழும்படியாக அவன் உடலில் பாதியானவள்
சமி கூவிளமோடு அறுகு ஆர் அணிவாள் – வன்னி, வில்வம் அறுகு மற்றும் ஆத்தி (முதலிய மாலைகளை) அணிந்துள்ளவள்
ஒரு கோடுடையோன் அனையாய் வருவாள் – ஒற்றைத் தந்தமுடைய கணபதியின் தாயாய் வருபவள்
சதுமறைகளும் வழிபட வளர்பவள் – நான்கு மறைகளும் துதி செய்ய, அவைகளை எல்லாம் விட உயர்ந்து இருப்பவள்
மலைமகள் என ஒரு பெயர் உடையவள் சுதனே – பார்வதி எனும் சிறந்த நாமம் தாங்கி இருப்பவளின் மகனே
அண்டர்கள் தொழு தேவா – தேவர்கள் வணங்கும் தலைவனே
3 – 4
பிஞ்சம்சூழ் மஞ்சொண் சேயும்சந்தங்கொள் பதங்கங்கூர்
பிம்பம்போல் அங்கம் சாருங்கண் கண்கள்இலங்கும் சீர்
ஓங்கவே உலாவு கால் விணோர்
பிரமனொடு எட்டுக் குலகிரி திக்குக்
கரியொடு துத்திப் படவர உட்கப்பார்
பிளிற நடத்திக் களித்தவா
கிரிகெட எக்கித் துளைத்தவா
பிரியக மெத்தத் தரித்தவா
தமியனை நச்சிச் சுளித்தவா
பிணமா முனமே அருள்வாய் அருள்வாய்
துனியாவையு நீ கடியாய் கடியாய்
பிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு
சததமு மறைவறு திருவடி தரவா . . . . . . என்களி முருகோனே.
……… பதவுரை ………
பிஞ்சஞ்சூழ் மஞ்சு ஒண்சேயும் – தன்னுடைய பின்புறத்தில் உள்ள ஒளி வீசுகின்ற (தோகையில்)
சம் ஒள்பதங்கங்கூர் – விசிறி போன்று நீண்டு மெலிந்துள்ள இறக்கைகளில் ஆங்காங்கே சிறப்பான
பிம்பம் போல் அங்கம் சாருங்கண் கண்களில் இலங்கும் – கண்ணாடி போன்று ஒளி வீசும் கண்களை உடைய (தோகையை) உடலில் கொண்ட மயிலானது
சீர் ஓங்கவே உலாவு கால் விணோர் – மிக அழகாக உலவி வரும் போது, தேவர்களும்
பிரமனொடு எட்டுக் குலகிரி திக்குக்கரியொடு – அயனுடன் எட்டுத் திக்கு மலைகளும், (அஷ்ட திக்) கஜங்களும்
துத்திப் பட அரவு உட்க – (உடலில்) புள்ளிகள் நிறைந்த ஆதிசேஷனும் அஞ்ச
பார் பிளிற நடத்திக் களித்தவா – நிலமும் அதிரவே (மயிலினை) நடத்தி மகிழ்ந்தவனே
கிரிகெட எக்கித் துளைத்தவா – க்ரௌஞ்ச மலையை துளைத்தவனே
பிரியகம் மெத்தத் தரித்தவா – கடப்பமாலையை விருப்பமுடன் அணிந்தவனே
தமியனை நச்சிச் சுளித்தவா – அடியேனை விரும்பி வந்து கோபித்து ஆட்கொண்டவனே
பிணமா முனமே அருள்வாய் அருள்வாய் – நான் இறக்கும் முன் அருள்வாய் அருள்வாய்
துனியாவையுமே கடியாய் கடியாய் – துன்பத்தை யெல்லாம் துடைப்பாய்
பிசியொடு பல பிழை பொறு பொறு பொறு பொறு – பொய்யோடு பல குற்றங்களைப் பொறுத் தருள்வாய்
சததமு மறைவு அறு திருவடி தரவா – எப்பொழுதும் வஞ்சனையற்ற நின் பதங்களைத் தர வா
என் களி முருகோனே – எனக்கு இன்பப் பொருளான முருகனே.
பாகம் 4 – சர்க்கரை (பட்டியலுக்கு)
நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம்.
அவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின்.
4 – 1
மாதமும் தின வாரமும் திதி
யோகமும் பல நாள்களும் படர்
மாதிரம் திரி கோள்களும் கழல்
பேணும் அன்பர்கள் பால் நலம் தர
வற்சலம் அதுசெயும் அருட்குணா
சிறந்த விற்பனர் அகக்கணா
மற்புய அசுரரை ஒழித்தவா
அனந்த சித்துரு எடுத்தவா
மால் அயன் சுரர்கோனும் உம்பர்
எலாரும் வந்தனமே புரிந்திடு
வானவன் சுடர் வேலவன் குரு
ஞான கந்தபிரான் எனும்படி
மத்தக மிசைமுடி தரித்தவா
குளிர்ந்த கத்திகை பரித்தவா
மட்டறும் இகல் அயில் பிடித்தவா
சிவந்த அக்கினி நுதற்கணா . . . . . . சிவகுரு எனும் நாதா.
……… பதவுரை ………
மாதமும் தினம் வாரமும் திதி யோகமும் – மாதம், நாள், வாரம், திதி மற்றும் யோகம்
பலநாள்களும் படர்மாதிரம் திரி கோள்களும் – பல நட்சத்திரங்களும் வானத்தில் உலவுகின்ற கிரகங்களும்,
கழல் பேணும் அன்பர்கள் பால் நலம் தர – உன் திருவடியை சரணாகதி அடைந்த அன்பர்கட்கு இவை யெல்லாம் நன்மை செய்ய
வற்சலம் அது செயும் அருட்குணா – பேரன்பு புரியும் அருள் உடையவனே
சிறந்த விற்பனர் அகக்கணா – கற்றறிந்த பெரியோரின் உள்ளத்தில் உலவுகின்றவனே
மற்புய அசுரரை ஒழித்தவா – வலிமைகொண்ட தோள்களுடைய அரக்கரை அழித்தவனே
அனந்த சித்துரு எடுத்தவா – அளவில்லா ஞானத் திருமேனி எடுத்தவனே
மால் அயன் சுரர்கோனும் உம்பர் – திருமால், பிரமன், இந்திரன் மற்றும் தேவர்கள்
எலாரும் வந்தனமே புரிந்திடு வானவன் – யாவரும் வணங்கும் தேவாதிதேவன்
சுடர்வேலவன் குரு ஞான கந்தபிரான் எனும்படி – ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, குருவே, கந்தப் பெருமானே எனும்படி
மத்தகமிசை முடி தரித்தவா – கிரீடத்தை சூட்டிக் கொண்டவா
குளிர்ந்த கத்திகை பரித்தவா – சில்லென்ற கடம்ப மாலைகளை (மார்பினில்) சுமந்தவனே
(கத்திகை – கடம்பு, பரித்தல் – சுமத்தல்)
மட்டு அறும் இகல் அயில் பிடித்தவா – எல்லையில்லாத பெருமையை உடைய வேலைப் பிடித்தவனே
சிவந்த அக்கினி நுதற் கணா – செந்தழலை கண்ணாக நெற்றியில் உடையவனே
சிவகுருஎனும் நாதா – பரமசிவனுக்கும் குருவான தலைவனே
4 – 2
நாத இங்கித வேதமும் பல்
புராணமும் கலைஆகமங்களும்
நாத உன் தனி வாயில் வந்தனவே
எனுந்துணிபே அறிந்தபின்
நச்சுவது இவண்எது கணித்தையோ
செறிந்த ஷட்பகை கெடுத்துமே
நட்புடை அருளமிழ்து உணில் சதா
சிறந்த துத்தியை அளிக்குமே
நாளும் இன்புஉயர் தேனினும் சுவை
ஈயும் விண்டலமே வரும் சுரர்
நாடியுண்டிடு போஜனம் தனி
லேயும் விஞ்சிடுமே கரும்பொடு
நட்டம் இன் முப்பழ முவர்க்குமே
விளைந்த சர்க்கரை கசக்குமே
நற்சுசி முற்றிய பயத்தொடே
கலந்த புத்தமு தினிக்குமோ . . . . . . அதை இனி அருளாயோ.
……… பதவுரை ….…..
நாத இங்கித வேதமும் பல் புராணமும் – இனிமையான இசையுடைய வேதமும், பலவகை புராணங்களும்
கலை ஆகமங்களும் நாத உன் தனி வாயில் வந்தனவே – மற்ற கலைகளும் ஆகமங்களும் உன் திருமுகத்திலிருந்து தோன்றியவையே
எனும் துணிபே அறிந்த பின் – என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்ட பின்னர்
நச்சுவது இவண் எது கணித்தையோ – எப்பொருளை மதித்து பெருமையாகக் கூறுவது
செறிந்த ஷட்பகை கெடுக்குமே – ஆறு துர்க்குணங்களை அழித்து
நட்புடை அருள் அமிழ்து உணில் – நீ அன்புடன் கொடுக்கும் அமுதத்தை உண்டால்
சதா சிறந்த துத்தியை அளிக்குமே – அனவரதமும் ஆனந்தத்தை கொடுக்குமே
நாளும் இன்பு உயர் தேனினும் – தினமும் தேனினும் சிறந்த
சுவை ஈயும் விண்டலமே வரும் – சுவையைத் தரும் விண்ணுலகில் வாழும்
சுரர் நாடி உண்டிடு – தேவர்கள் விரும்பி உண்ணும்
போஜனம் தனிலேயும் விஞ்சிடுமே – உணவாகிய அமுதத்தையும் மிஞ்சிவிடும்;
கரும்பொடு விளைந்த சர்க்கரை கசக்குமே – கரும்பிலிருந்து வந்த சர்க்கரை கூட கசப்பாகும்
நட்டமின் முப்பழம் உவர்க்குமே – மேலும் குற்றமில்லாத முக்கனிகளும் சுவை தாரா
நற்சுசி முற்றிய – தூய நல்ல
பயத்தோடே கலந்த புத்தமுது இனிக்குமோ – பாலில் ஆக்கிய சோறும் தான் தித்திக்குமோ
அதை இனி அருளாயோ – அந்த மேலான அமுதத்தை நீ எனக்குத் தர மாட்டாயோ ?
4 – 3
பூதலம் தனிலேயு (ம்) நன்கு உடை
மீதலம் தனி லேயும் வண்டு அறு
பூ மலர்ந்தவு னாத வம்பத
நேயம் என்பதுவே தினம் திகழ்
பொற்புறும் அழகது கொடுக்குமே
உயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே
பொய்த்திட வினைகளை அறுக்குமே
மிகுந்த சித்திகள் பெருக்குமே
பூரணம் தருமே நிரம்பு எழில்
ஆதனம் தருமேஅணிந்திடு
பூடணம் தருமே இகந்தனில்
வாழ்வதும் தருமே உடம்பொடு
பொக்கறு புகழினை அளிக்குமே
பிறந்து செத்திடல் தொலைக்குமே
புத்தியில் அறிவினை விளக்குமே
நிறைந்த முத்தியும் இசைக்குமே . . . . . . இதைநிதம் உதவாயோ.
……… பதவுரை ………
பூ தலம் தனிலேயும் – பூமியிலும், நன்கு உடை மீ தலம் தனிலேயும் – மேன்மை தங்கிய விண்ணுலகிலும்
வண்டுஅறு பூ மலர்ந்தவு நாத வம் பத – வண்டு மொய்க்காத மலர்கள் போன்றதும், அணிகளினால் ஒலி செய்வதுமான திருவடிகள் மீது
நேயமென்பதுவே தினம் திகழ் – ஏற்படும் அன்பு அனவரதமும் விளங்கும்
பொற்புறும் அழகது கொடுக்குமே – பொலிவுறும் அழகைக் கொடுக்கும்
உயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே – ஓங்கிய புகழைக் கொடுக்கும்
பொய்த்திட வினைகளை அறுக்குமே – இரு வினைகளைக் களையும்
மிகுந்த சித்திகள் பெருக்குமே – உயர்ந்த சித்திகள் அளிக்குமே
பூரணம் தருமே நிரம்பு எழில் – முழுமையைத் தரும் அழகுடன்
ஆதனம் தருமே அணிந்திடு பூடணம் தருமே – செல்வமும் தரும், ஆபரணங்களையும் தரும்
இகந்தனில் வாழ்வதும் தரும் உடம்பொடு – இந்த உலகத்தினில் இந்த உடலிலேயே நல்ல வாழ்வைத் தரும்
பொக்கு அறுபுகழினை அளிக்குமே – நல்ல புகழைக் கொடுக்கும்
பிறந்து செத்திடல் தொலைக்குமே – ஜனன மரணத்தை அழிக்கும்
நிறைந்த முக்தியை இசைக்கும் – அதனால் கூடிவரும் முக்தியை கொடுக்கும்
இதை நிதம் உதவாயோ – இதை நீ தினமும் அளித்து உதவி புரிய மாட்டாயா?
4 – 4
சீதளம் சொரி கோதில் பங்கயமே
மலர்ந்திடு வாவி தங்கிய
சீர் அடர்ந்தவிர் ஆவினன்குடி
ஏரகம் பரபூத ரம்சிவ
சித்தரும் முனிவரும் வசித்த
சோலையும் திரைக்கடல் அடிக்கும்வாய்
செற்கணம் உலவிடு பொருப்பெலாம்
இருந்து அளித்தருள் அயில் கையா
தேன் உறைந்திடு கான கந்தனில்
மானிளம் சுதையால் இரும் சரை
சேர் உடம்பு தளாட வந்த
சன்யாச சுந்தரரூப அம்பர
சிற்பர வெளிதனில் நடிக்குமா
அகண்ட தத்துவ பரத்துவா
செப்பரும் ரகசிய நிலைக்குளே
விளங்கு தற்பர திரித்துவா . . . . . . திருவளர் முருகோனே.
……… பதவுரை ………
சீதளம் சொரி கோது இல் பங்கயமே – குளிர்ந்த குற்றமற்ற தாமரை
மலர்ந்திடு வாவி தங்கிய சீர் அடர்ந்தவிர் – மலர்ந்திடும் குளங்கள் மிகுந்துள்ள
ஆவினன்குடி, ஏரகம், பரபூதரம், – திருவாவினன்குடி, திருவேரகம், திருப்பரங்குன்றம் மற்றும்
சிவ சித்தரும் முனிவரும் வசித்த – சிவ சித்தர்களும் முனிவர்களும் உறையும்
சோலையும் திரைக்கடல் அடிக்கும்வாய் – பழமுதிர்சோலையும், கடல் அலைகள் பொங்கும் சீரலைவாயும்
செற்கணம் உலவிடு பொருப்பெலாம் – மேகங்கள் உலாவருகின்ற குன்றுதோராடலிலும்
இருந்தளித்தருள் அயில் கையா – எழுந்தருளி அருள்செய்யும், கையில் வேல் ஏந்தியவனே
தேன் உறைந்திடு கானகந்தனில் – தேன்நிறைந்த மலர்கள் உள்ள காட்டினில்
மான் இளம் சுதையால் – மான் ஈன்ற பெண்ணாகிய வள்ளியை மணக்க
இரும் சரை சேர் உடம்பு தள்ளாட – நரை விழுந்த உடம்பு தள்ளாடி
வந்த சன்யாச சுந்தர ரூப அம்பர – வந்த அழகான துறவியே
அம்பர சிற்பர வெளி தனில் நடிக்கும் மா – வானமாகிய ஞானப் பெருவெளியில் நாடகமாடும் பெரிய
அகண்ட தத்துவ பரத்துவா – முழுமையான தத்துவ பரமாத்மனே
செப்பரும் ரகசிய நிலைக்குள்ளே – கூறுவதற்கு அரிதான தகராலயத்திலே உள்ள குகையில்
விளங்கு தற்பர திரித்துவா – நிலை கொண்டவனே
திருவளர் முருகோனே – உன் அருளை வளரச் செய்பவனே முருகனே.
பாகம் 5 – தேன் (பட்டியலுக்கு)
கந்தன் ஆடி வரும் வண்ணத்தைக் கண்டு, அண்ட சராசரமும் அதில் உள்ள அத்தனை பேர்களும் இன்பமுடன் ஆடும் அழகைக் காண்மின்.
5 – 1
சூலதரனார் ஆட ஓதிமகளாட நனி
தொழுபூத கணமாட அரி ஆட அயனோடு
தூயகலை மாது ஆட மா நளினி யாட உயர்
சுரரோடு சுரலோக பதியாட எலியேறு
சூகைமுகனார் ஆட மூரிமுகன் ஆட ஓரு
தொடர்ஞாளி மிசைஊரு மழவாட வசுவீர
சூலிபதி தானாட நீலநம னாடநிறை
சுசிநார இறையாட வலிசால் நிருதியாட . . . . . . அரிகரமகனோடே
……… பதவுரை ………
சூலதரனாராட – சூலம் எடுத்த சிவன் ஆட
ஓதி மகளாட – மலைமகளாட (ஒதி – மலை)
நனிதொழு பூத கணமாட – நன்றாகத் தொழும் பூதகணங்கள் ஆட
அரியாட அயனொடு – திருமாலாட பிரமனொடு
தூயகலை மாது ஆட – கலைமகளாட
மா நளினிஆட – அழகிய இலக்குமி ஆட
உயர் சுரரோடு சுரலோக பதியாட – உயர்ந்த தேவர்களுடன் இந்திரனாட
எலிஏறு சூகைமுகனாராட – மூஞ்சூறை வாகனமாகக் கொண்ட யானை முகனாராட
மூரிமுகன் ஆட – நந்தியெம்பெருமான் ஆட
தொடர்ஞாளி மிசை ஊருமழவாட – நாய் பின் தொடர வரும் வயிரவர் ஆட
வசுவீர சூலிபதி தானாட – வசுக்களும், பத்திரகாளியும் அவள் பதியான வீரபத்திரனுமாட
நீலநமனாட – கருநிறத்தவனான இயமன் ஆட
நிறைசுசி நார இறைஆட – தூய்மையான கடலின் தலைவனாம் வருணனாட
வலிசால் நிருதி ஆட – வலிமை மிகுந்த நிருதி (தென்மேற்கு திக்கின் அதிபதி) ஆட
அரிகரமகனோடே – (அரி, அரன் மகன்) ஐய்யப்பனுடன்
5 – 2
காலிலியு மேயாட வாழ்நிதிய னாடமிகு
கனஞால மகளாட வரவேணி சசிதேவி
காமமத வேளாட மாமைரதி யாட அவிர்
கதிராட மதியாட மணிநாக அரசு ஓகை
காணும் முனிவோராட மாணறமினாட இரு
கழலாட அழகாய தளையாட மணிமாசு இல்
கானமயில் தானாட ஞான அயிலாட ஒளிர்
கரவாள மதுவாட எறிசூல மழுவாட . . . . . . வயிரமல் எறுழோடே
……… பதவுரை ………
காலிலியுமேஆட – கால் இல்லாத வாயு ஆட
வாழ்நிதியனாட – குபேரனாட
மிகுகன ஞால மகளாட – பெருமை மிகுந்த பூமி மகள் ஆட
வரவேணி சசிதேவி காமமதவேளாட – கங்கை, இந்திராணி மற்றும் மன்மதனாட
மாமை ரதி ஆட – அழகு நிறைந்த ரதி தேவி ஆட
அவிர்கதிர் ஆட மதிஆட – சூரியனும் சந்திரனுமாட
மணிநாக அரசு – மணி அணிந்த நாகராஜன்
ஓகை காணு முனிவோராட – பேரின்பம் தெரிந்த முனிவர் ஆட
மாண் அறமின் ஆட – மாண்புமிக்க அறக்கடவுளாட
இருகழலாட அழகாய தளைஆட – கழல்களும், அழகிய சிலம்புகளும் ஆட
மணி மாசு இல் கான மயில்தானாட – அழகிய குற்றமற்ற மயிலாட
ஒளிர்கர வாளம் அதுவாட – ஒளிபொருந்திய வாள் கரத்தினில் ஆட
எறிசூலம் அதுஆட – எறிகின்ற சூலம் ஆட
வயிரமெலெறுழோடே – வயிரம் பாய்ந்த தண்டாயுதமாட
(எறுழ் – தண்டாயுதம்)
5 – 3
கோல அரை ஞாணாட நூன்மருமமாட நிரை
கொளுநீப அணியாட உடையாட அடல்நீடு
கோழி அயராது ஆட வாகுவணி யாடமிளிர்
குழையாட வளையாட உபயாறு கரமேசில்
கோகநத மாறாறொடாறு விழியாட மலர்
குழகாய இதழாட ஒளிராறு சிரமோடு
கூறுகலை நாவாட மூரல் ஒளியாட வலர்
குவடேறு புயமாட மிடறாட மடியாட . . . . . . அகன்முதுகுரமோடே
……… பதவுரை .……..
கோல அரைஞாணாட – அழகிய அரைஞாணாட
நூன்மருமமாட – மார்பில் பூணூல் ஆட
விரைகொளு நீப அணி ஆட – மணமுள்ள கடப்ப மாலை ஆட
உடைஆட அடல் நீடுகோழி அயராது ஆட – ஆடை ஆட, வலிமை மிக்க கோழி இடைவிடாது ஆட
வாகுஅணி ஆட – தோள் வளை ஆட
மிளிர் குழை ஆட – அழகிய குழை ஆட
வளைஆட உபயாறு கரம் – பன்னிரு கரங்களில் வளைஆட
ஏசில் கோகனதம் ஆராறொடு ஆறு விழியாட – மென்மையான, குற்றமற்ற தாமரைமலர் போன்ற பன்னிரு விழிகளுடன் ஆறு நெற்றிக்கண்களும் ஆட
மலர் குழகாயயிதழாட – மலர் போன்ற அழகுடன் இதழாட
ஒளிர் அறுசிரமோடு – ஆறு சிரங்களும் அழகுடன் விளங்க
கூறு கலைநாவாட – வேதங்களைக் கூறும் முகமாட
மூரல் ஒளியாட – பற்கள் பளீரென்று ஒளிவீசிட
அலர் குவடேறு புயமாட – பெரிய மலைகளை ஒத்த புயங்களாட
மிடறாட மடியாட – கழுத்தும் மடியும் ஆட
அகன்முதுகுரமோடே – அகன்ற வலிய முதுகோடு
5 – 4
நாலுமறை யேயாட மேல் நுதல்களாட வியன்
நலியாத எழிலாட அழியாத குணமாட
நாகரிகமே மேவு வேடர்மகளாட அருள்
நயவானை மகளாட முசுவான முகனாட
நாரதமகான் ஆட ஓசைமுனி ஆட விற
னவவீரர் புதராட ஒரு காவடியன் ஆட
ஞான அடியாராட மாணவர்கள் ஆட இதை
நவில் தாசன் உடனாட இதுவேளை எணிவாகொள் . . . . . . அருள்மலி முருகோனே.
……… பதவுரை ………
நாலு மறையே ஆட – நான்கு வேதங்களும் ஆட
மேல்நுதல்களாட – மேன்மையுடைய புருவங்களாட
வியன் நலியாத எழிலாட – பெருமை குன்றாத அழகே ஆட
அழியாத குணமாட – கருணை நிறைந்து ஆட
நாகரிகமே மேவு வேடர் மகளாட – வசீகரம் கொண்ட வள்ளி ஆட
அருள்நய வானை மகள் ஆட – நயந்து அருள்தரும் தெய்வயானை அம்மை ஆட
முசுவான முகனாட – முசுகுந்த மன்னன் ஆட
நாரத மகானாட – நாரத முனிவர் ஆட
ஓசை முனிஆட – சந்தப் புலவர் அருணகிரியார் ஆட
விறல் நவவீரர் புதர் ஆட – வெற்றிகொள் நவ வீரர்களும் அறிஞர்களும் ஆட
ஒரு காவடியனாட – ஒப்பற்ற காவடி எடுத்த இடும்பனாட
ஞான அடியாராட – ஞானம் நிறைந்த பக்தர்கள் ஆட
மாண் அவர்கள் ஆட – மாட்சிமை தங்கிய பெரியோர் ஆட
இதை நவில் தாசன் உடனாட – இப்பாடலைப் பாடும் தாசனாகிய அடியேனும் ஆட
இது வேளை எணி வா கொள் – இவ்வேளையில் என்னை எண்ணி இங்கு வா, என்னை ஆட்கொள்
அருள்மலி முருகோனே – மிகுந்த அருளுடைய முருகோனே.
… … பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் இனித்ததே. … …
Sri Bava

Sri Bava

Leave a Replay