கந்தர் கலி வெண்பா

பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு 1

நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த
போதமுங் காணாத போதமாய் – ஆதிநடு 2

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தந் தணந்த பரஞ்சுடராய் – வந்த 3

குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்கும்
செறியம் பரம சிவமாய் – அறிவுக் 4

கனாதியா யைந்தொழிற்கு மப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் – தனாதருளின் 5

பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் – எஞ்சாத 6

பூரணமாய் நிந்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் – தாரணியில் 7

இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல – முந்தும் 8

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம் 9

ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்
போகஅதி காரப் பொருளாகி – ஏகத்து. 10

உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் – இருண்மலத்துள் 11

மோகமுறும் பல்லுயிர்க்கும் முத்தி அளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் – தேகமுறத் 12

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து – மந்த்ரமுதல் 13

ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து – மாறிவரும் 14

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி எண்பான்
ஆரவந்த நான்குநூறாயிரத்துள் – தீர்வரிய 15

கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து – வெந்நிரய 16

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் – தர்க்கமிடும் 17

தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுமே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து – முன்னூல் 18

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்
சரியைகிரி யாபோகம் சார்வித்து – அருள்பெருகு 19

சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து – நால்வகையாம் 20

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் – பெத்த 21

மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி – உலவா 22

தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப்-பிறியாக் 23

கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு – திருநோக்கால். 24

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் – பாழாக 25

ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் – பூணும் 26

அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி – முடியாது 27

தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் – போக்கும் 28

வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்து உலவா இன்பம் – மருவுவித்துக் 29

கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் – மின்னிடத்துப் 30

பூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளி வெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி – மூத்த 31

கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று
ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் – பெருகியெழு 32

மூன்றவத்தை யும் கழற்றி முத்தருட னேயிருத்தி
ஆன்றபர முத்தி அடைவித்துத் – தோன்றவரும் 33

யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக – ஞானம். 34

திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா – இருநிலமே 35

சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே – மின்னுருவம் 36

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் – தேய்ந்தபிறைத் 37

துண்டம்இரு மூன்று நிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்துநுதல் பொட்டழகும் – விண்ட 38

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் – பருதி 39

பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் – நிலவுமிழும் 40

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் – வின்மலிதோள் 41

வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் – எவ்வுயிர்க்கும. 42

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் – சூழ்வோர் 43

வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் – விடுத்தகலாப் 44

பாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும்
வாச மலர்வதன மண்டலமும் – நேசமுடன் 45

போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் – தாகமுடன் 46

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையம் – கொந்தவிழ்ந்த 47

வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் – ஆரமுதம் 48

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
மேவக் குழைந்தணைந்த மென்கரமும் – ஓவாது 49

மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும் – மார்பகத்தில் 50

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் – மொய்த்த 51

சிறதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங்கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் – தெறுபோர் 52

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் – முதிராத 53

கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் – பைம்பொன் 54

புரிநூலும் கண்டிகையும் பூம்பட்டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் – திருவரையும் 55

நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் – சோதி 56

இளம்பருதி நூறா யிரங்கோடி போல
வளந்தரு தெய்வீக வடிவும் – உளந்தனில்கண்டு 57

ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே – ஓதியஐந்து 58

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே – தாங்கரிய 59

மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் – பந்தனையால் 60

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா-வைத்த 61

கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்
நிலையே வடிவமா நின்றோய் – பலகோடி. 62

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் – தொண்டுபடும் 63

ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே – மேவ 64

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே – பருவத்து 65

அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் – சுகலளிதப் 66

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் – பாரின்பம் 67

எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் – தொல்லுலகில் 68

ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் – ஏறுமதம் 69

தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் – வாய்ந்தசிவ. 70

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் – காரணத்துள் 71

ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும் – சந்ததமும் 72

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைந்தருளும் ஆணையும் – தேக்கமழ்ந்து 73

வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே – தேசுதிகழ் 74

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி – ஆங்கொருநாள் 75

வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் – தந்து 76

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப – விரிபுவனம் 77

எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் – அங்கண். 78

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் – அடுத்ததொரு 79

பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்
சீதக் பகீரதிக்கே சென்றுய்ப்பப் – போதொருசற்று. 80

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் – முன்னர் 81

அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் – குறுமுறுவல் 82

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் – தன்னிரண்டு 83

கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் – செய்ய. 84

முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் -சகத்தளந்த 85

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே – கிள்ளைமொழி. 86

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து – தங்கள் 87

விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீரவாகு – நெருப்பிலுதித்து 88

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து – எங்கோன் 89

விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா – படைப்போன் 90

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை – புகன்றிலையால் 91

சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே – மட்டவிழும் 92

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே – கொன்னெடுவேல் 93

தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக
வீரவடி வேல் விடுத்தோனே – சீரலைவாய்த் 94

தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து – வெள்ளைக் 95

கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் – சயேந்திரனாம் 96

சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய
வீரனைத் தூதாக விடுத்தோனே – காரவுணன் 97

வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் – பானு. 98

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் – சகமுடுத்த 99

வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் – போரவுணன் 100

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் – அங்கவற்றுள் 101

சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே – மாறிவரு. 102

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்த்த மேலோனே – மூவர் 103

குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே – மறைமுடிவாம் 104

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே – பொய்விரவு 105

காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்தப் – பூமருவு. 106

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து – மேன்மைபெறத் 107

தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே – உள்ளம் உவந்து 108

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே – நாறுமலர்க் 109

கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே – சந்ததமும். 110

பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் – பல்கோடி 111

பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும் அடல்
பூதமுந்தீ நீரும் பொருபடையும் – தீது அகலா. 112

வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்த்தாலும் – அவ்விடத்தில் 113

பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் மயில்வேலும் – கச்சைத் 114

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் – விரகிரணம் 115

சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற – வந்திடுக்கண். 116

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து – பல்விதமாம் 117

ஆசுமுதல் நாற்கவியம் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப்பியத் தொகையும் – ஓசை 118

எழுத்துமுத லாம் ஐந்த இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து – ஒழுக்கமுடன் 119

இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் – தம்மைவிடுத்து 120

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் – சேய 121

கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள். 122

Senthi

Senthi

Leave a Replay