பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

pamban

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் , (பி.1850-52,இ.மே 30,1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார்.

தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.

இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது மதுரை சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர்.

1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப்பயணங்கள் மேற்கொண்டார்.

1923ஆம் ஆண்டு திசம்பர் 27 அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்த சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததாக அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

மே 30,1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலாமாக எடுத்து வரப்பட்டு மே 31.1929 திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.

சுவாமிகள் இயற்றிய பாடல்கள்

 

  • சண்முக கவசம்
  • பஞ்சாமிருத வண்ணம்
  • குமரகுருதாச சுவாமிகள் பாடல் – 1266
  • ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) – 1192
  • திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) – 1135
  • திருப்பா (திட்ப உரை) – 1101
  • காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) – 608
  • சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) – 258
  • சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் – புலால் மறுப்பு) – 235
  • பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) – 230
  • செக்கர் வேள் செம்மாப்பு – 198
  • செக்கர் வேள் இறுமாப்பு – 64
  • தகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை)- 117
  • குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி – 100
  • சேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்)- 50
  • குமாரஸ்தவம் 44
  • தென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) 35
  • பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30
  • ஆனந்தக்களிப்பு 30
  • சமாதான சங்கீதம் 1
  • சண்முக சகச்சிர நாமார்ச்சனை 2

ஆகப் பாடல்கள் 6666

 நன்றி: விக்கிபீடியா

Senthi

Senthi

Leave a Replay