|
- தி.செல்லப்பா மே
27- வைகாசி விசாகம் வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான்
அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. காளிதாசர் எழுதிய, "குமார
சம்பவம்' எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.
சம்பவம் என்றால், தோன்றுதல் குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால்,
இந்தப் பெயர் வைக்கப்பட்டது. காளிதாசர் இந்தத் தலைப்பை வால்மீகி
ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுத்தார். முனிவர்களின் யாகத்திற்கு
இடைஞ்சல் செய்த தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய,ராமபிரானை விஸ்வாமித்திரர்
அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கந்தப்பெருமானின் பிறப்பு, அவர்
பத்மாசுரனை அழித்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ராம லட்சுமணருக்கு சொன்னார்.
இந்த நிகழ்ச்சியை வால்மீகி, "குமார சம்பவம்' என வர்ணித்துள்ளார். அந்த
வர்ணனையே, காளிதாசருக்கு தலைப்பாக கிடைத்து விட்டது. பத்மாசுரன்
என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும்
அழிக்க முடியாத வரம் பெற்றான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண்
சம்பந்தமில்லாமல் பிறக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்து, சிவனிடம்
அனுமதி வாங்கிவிட்டான். பிறகென்ன... இப்படி ஒருவன் பிறக்கவே முடியாதென்ற
எண்ணத்தால், ஆணவம் கொண்டு, தேவர்களைத் துன்புறுத்தினான். சிவனிடம்
முறையிடுவதற்காக சென்றனர் தேவர்கள். அப்போது, தட்சிணாமூர்த்தியாக வடிவம்
தாங்கி, தவத்தில் இருந்தார் சிவன்; அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும்
தவத்தில் இருந்தார். தவமிருக்கும் நேரத்தில், எது கேட்டாலும் கிடைக்கும்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், தங்களைத் துன்புறுத்தும் அசுரனை
அழிக்கும் ஒரு அம்சம் உருவாக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். சிவன்,
உடனடியாக விநாயகரை அனுப்பியிருக்கலாம்; ஆனால், அவரோ பார்வதியின் அம்சமாகத்
தோன்றியவர். பெண் சம்பந்தம் அவருக்கு இருக்கிறது. பத்மாசுரனுக்கு கொடுத்த
வாக்கைக் காப்பாற்ற, தன் நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கி,
கங்கை நதியில் விட்டார். அவை இணைந்து கந்தப்பெருமான் அவதரித்தார். இவருக்கு
சுப்பிரமணியன் என்றும் பெயர் உண்டு. "ஸுப்ரஹ்மண்யன்' என்ற பெயரே, தமிழில்
இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள்.
சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது. முருகப்பெருமான்
ஆறு வயது வரை மட்டுமே பாலப்பருவ லீலைகளைச் செய்தார். பிரம்மாவுக்கு, "ஓம்'
என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தது,
தந்தைக்கே பாடம் சொன்னது, தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நாவல்கனியைக் கொடுத்து,
சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு, அந்த
அறிவுக்கடலையே கலங்கச் செய்தது, உலகைச் சுற்றும் போட்டியில் பங்கேற்று,
தண்டாயுதபாணியாக மலையில் நின்றது ஆகிய லீலைகள் குறிப்பிடத்தக்கவை. பின்னர்,
அவர் தேவர்களின் சேனாதிபதியாகி, தேவசேனாதிபதி என்ற பெயர் பெற்றார்.
தேவசேனா என்பது, தெய்வானையின் பெயர். அவளை மணந்து, அவளுக்கு பதியானதாலும்
இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். குறமகளான வள்ளியை மணந்ததன் மூலம்,
இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமில்லை என்பதை உலகுக்கு
உணர்த்தினார். முருகப்பெருமானின் அவதார நன்னாளில், அவர் குடிகொண்டுள்ள
மலைக் கோவில்களுக்குச் சென்று, நல்லருள் பெற்று வருவோம். |